கலியுக கண்ணனே
உன் காற்று வீசும் திசைகளில்
கவிதையும் வீசுமோ
உன் வாசம் கண்டதும்
வரைமுறையில்லாமல்
வார்த்தைகளும்
வந்து விழுகிறதே
பிறை நிலா என்னோடு பேசுகிறது
மேகக் கூட்டம் ஒன்றுதிரண்டு
வாழ்த்து சொல்கிறது
வெட்கப் புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!
நாளும் நான் பார்த்து எழும்
நவயுக ராஜனே
நீ விழி திறக்கும் நேரம்
நான் விழித்திருக்கும் நேரம்
கண்கள் திறந்ததும்
கைகள் கட்டியணைக்கத் துடிக்கும்
மனமோ தத்தளித்து மிதக்கும்
அர்த்தப் புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!
நீ இல்லாத நேரம்
வானம் வெரிச்சோடிக் கிடக்கும்
காற்றில் ஈரப்பதம் கூடும்
உள்ளம் உன் பெயரை
உச்சரித்து உச்சரித்தே தேயும்
பறந்து திரியும் பட்சிகளும்
எனைப் பார்த்து ஏளனம் செய்யும்
உன் வருகை அறிந்ததுமே
இவையனைத்தும் தன்னிலை மாறும்
கர்வ புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!
என் முகம் சிவக்கும் ரோஜாவாய்
மனம் உவக்கும் உனக்காய்
சினம் கொஞ்சம் இருக்கும்
உன் மணம் கண்டதும் இறக்கும்
மீண்டும் புத்தம் பதிதாய்ப் பிறப்பேன்
புது சொர்க்கம் உருவாகும்
சூரியன் இறப்பான்
வெளிச்சம் எனை சூழும்
ஒளிரும் புன்னகை
எனக்குள்ளே எனக்குள்ளே..!
- சுடர்க்கொடி
- சுடர்க்கொடி
No comments:
Post a Comment