Saturday 20 April 2013

ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே..!



நம் காதல் திருவிழாக்கள்
நடந்து அரங்கேறிய அந்த வேளையில்
தனிமையில் நீயும் நானும்
ஒருவரையொருவர்
உற்று நோக்கிக் கொண்டிருந்த தருணம்
நம் பார்வை அம்புகள் ஒருவரையொருவர்
துளைத்துக் கொண்டிருந்தன

தூரத்தில் கேட்கும் இசையெல்லாம்
சங்கீதமாய் ஒவ்வொன்றும்
நமக்காகவே எழுதப்பட்ட வரிகளாய்
எனக்குள்ளும் உனக்குள்ளும்
இன்பத்தை எழுப்பிக் கொண்டிருந்தன

நம் காதல் ஐயங்களுக்கு
விழியாலே விழிக்கு
விளக்கம் சொல்லிக்கொண்டு
உன்னழகை நானும் என்னழகை நீயும்
ஒருவருக்கொருவர்
அளந்து கொண்டிருந்தோம்

ஊதக்காற்று நம் காதுக்குள்
ஏதோ சொல்ல எத்தனிக்க
அர்த்தம் விளங்கியதாய்
இருவரும் எழுந்து நடக்கத் தொடங்கினோம்
விளக்கணைக்க

அணைந்தது விளக்காயினும்
ஒளிர்ந்தது இருளில் பட படக்கும்
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள்
அறைக்குளும் நம் நெஞ்சிற்குள்ளும்..!